திருக்குர்ஆன் மாநாடு ஏன்?
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
இன்று முஸ்லிம்களாக வாழக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்துள்ளான். நாம் எப்படி இந்த மார்க்கத்திற்குள் இணைந்துள்ளோம் என்று சற்று சிந்தித்து பாருங்கள். நாமாக குர்ஆனை படித்து சிந்தித்து ஆராய்ந்து இதற்குள் வந்தோமா? அல்லது நமது முன்னோர்கள் காரணமா? பல தலைமுறைக்கு முன்னால் நாமும் தமிழக மக்களில் ஏதோ ஒரு சாதியில் அங்கம் வகித்திருந்தோம். அரபு நாடுகளிலிருந்து வந்து வணிகம் செய்த அரபியர்கள் மூலம் கிடைத்த மார்க்கம் இது. இல்லை என்று நம்மால் அறுதியிட்டு சொல்ல முடியுமா? கண்டிப்பாக முடியாது.
அரபியர்கள் இந்த மார்க்கத்தை முழுமையாக விளங்கி நமக்கு தெரிந்த இந்த தூய்மையான மார்க்கம் பிற மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த மார்க்கம் கடல் கடந்து, தேசம் கடந்து நமது முன்னோர்களை வந்து அடைந்தது. அரபியர்கள் நாம் ஏன் இந்த மார்க்கத்தை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால் இன்று நமது நிலை? கேள்வி குறிதான்.
இப்படி எடுத்து சொன்னதின் மூலம் நமக்கு கிடைத்த மார்க்கம் இன்னும் தமிழகத்தில் பல மக்களிடத்தில் சென்று சேராமல் உள்ளது. புள்ளி விபரங்களோடு சொன்னால் உங்களுக்கு நன்கு புரியும். இன்று தமிழகத்தில் சுமார் 7 கோடி மக்கள் வாழ்கின்றோம். அதில் சிறுவர்களை கழித்து விட்டு பார்த்தால் தோராயமாக 5 கோடி மக்கள் பருவ வயதை அடைந்தவர்கள். இவ்வளவு எண்ணிக்கை மக்களை கொண்ட மாநிலத்தில் எத்தனை திருக்குர்ஆன் அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தால், 10 சதவீதம் திருக்குர்ஆன் மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது. மீதம் 90 சதவீதம் மக்களுக்கு இந்த அகிலத்தின் அருட்கொடையாய் விளங்குகின்ற திருக்குர்ஆன் கொண்டு சேர்க்கப்படாமலேயே உள்ளது. அதற்குரிய முதல் முயற்சியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருக்குர்ஆன் மாநாடை அறிவித்து அதிகமான மக்களுக்கு இந்த அறிவுரை சென்றடையும் வண்ணம் திருக்குர்ஆன் பிரதிகளை அச்சிட்டு ஒவ்வொரு ஊரில் உள்ள அனைத்து சகோதரர்களுக்கும் குறிப்பாக மாற்றுமத சகோதரர்களுக்கு இலவசமாக வழங்கி கொண்டிருக்கிறோம். அதன் வாயிலாக அவர்களும் இந்த அற்புத மார்க்கத்தில் நுழைவதற்கும், நம்மோடு மறுமையில் அவர்களும் வெற்றி பெறுவதற்கும், மாற்றுக் கொள்கையில் உள்ள சகோதரர்கள் நேர்வழி பெறுவதற்கும் இந்த மகத்தான பணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செய்து கொண்டிருக்கிறது. அல்லாஹ்வின் அருள் மறையைப் பிற மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தாஃவா பணிகளிலே மிகச் சிறந்த தாஃவா பணியாகும். இது ஒரு ஜமாத்துக்கு மட்டும் உள்ள தாஃவா பணியல்ல, மாறாக நம் அனைவரின் மீதும் சுமத்தப்பட்ட தாஃவா பணி. அதை ஏக இறைவன் திருக்குர்ஆனில் பல வசனங்களில் ரத்தினச் சுருக்கமாக தெளிவுபடுத்தி கட்ளையிட்டுள்ளான்.
அழகிய சொல்லுக்குரியவன் யார் தெரியுமா?
அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்? திருக்குர்ஆன் 41:33
அல்லாஹ்வின் பார்வையில் நல்லவர்கள் இந்த மார்க்கத்தை சொல்பவர்கள்…!
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். திருக்குர்ஆன் 3:114
மனித குலத்திலேயே நாம் தாம் சிறந்த சமுதாயம்…!
நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள். திருக்குர்ஆன் 3:110
நம் மூலம் அல்லாஹ் ஒருவனுக்கு நேர்வழி காட்டுவதின் நன்மைகள்…!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உன் மூலமாக ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழியளிப்பது சிவப்பு ஒட்டகைகளை விட உங்களுக்குச் சிறந்ததாகும். அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி) நூல்: புகாரி (4210)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (மக்களை) நேரான வழியின் பால் அழைக்கிறாரோ அவருக்கு அதைப் பின்பற்றுபவரின் கூலிகளைப் போன்ற கூலி கிடைக்கும். இவ்வாறு கொடுப்பது அதைச் செய்தவர்களின் கூலியிலிருந்து கொஞ்சம் கூட குறைத்து விடாது கவலைப்பட வேண்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (4831)
அல்லாஹ்வின் மார்க்கத்தை பிற மக்களுக்கு சொல்லாமல் மறைப்பவனின் நிலை..!
அல்லாஹ்விடமிருந்து தனக்குக் கிடைத்த சான்றை மறைப்பவனை விட அநீதி இழைத்தவன் யார்? நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. திருக்குர்ஆன் 2:140
வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். திருக்குர்ஆன் 2:159
இப்படி மார்க்கத்தை சொல்லாமல் அல்லாஹ்வின் சாபத்தை நாம் பெற்றுவிடக் கூடாது. அல்லாஹ்வின் இந்த தூய்மையான மார்க்கத்தை பிற மக்களிடத்தில் சொல்லக் கூடியவர்களாக, அல்லாஹ்விடத்தில் நன்மையை பெற்று கொள்ளக் கூடியவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்குவானாக…!
இந்த திருக்குர்ஆனை மாற்றுமத சகோதரர்களுக்கு கொடுத்து, அவர்களை நேர்வழிக்கு அழைக்க ஆர்வம் உண்டா? ஒரு குர்ஆனின் விலை 12.50 ரியால். நீங்கள் கொடுக்கும் இந்த பொருளாதாரம் இன்ஷா அல்லாஹ் மாற்றுமத சகோதரர்களுக்கு கொண்டு சேர்க்கப்படும். உங்கள் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினால் அது உங்கள் மறுமை வாழ்க்கைக்கு சிறந்தது. இந்த வாய்ப்பை அல்லாஹ் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக…
இந்த fileலை download செய்ய இங்கே கிளிக் செய்யவும்