இணைவைப்பை வேரறுக்கும் திருக்குர்ஆன்!

அல்லாஹ் நம் அனைவரையும் படைத்து, பரிபாலித்து பக்குவப்படுத்தியிருக்கிறான். அப்படியிருக்க வணங்க தகுதியானவன் அல்லாஹ் மட்டும்தான் என்று உணர்ந்திருக்கிறோம். ஆனால் முஸ்லிம்களில் சிலர் அவ்லியாக்களையும் வணங்கலாம் என்றும், அவர்கள் இறைவனை நெருக்கமாக்கி வைப்பார்கள் என்றும் கருதுகின்றனர். இவர்கள் இவ்வாறு கருதுவதற்கு காரணம் குர்ஆன் ஹதீஸ்களை பின்பற்றாத மூதாதையர்கள்தான். இவர்கள் மார்க்கத்திற்கு முரணாக கடைப்பிடித்து வந்த தவறான கொள்கையே ஆகும்.
நம்முடைய மூதாதையர்கள் குர்ஆன் ஹதீஸ்களை தங்களது தாய்மொழியில் உணர்ந்து படித்து தங்கள் பிள்ளைகளுக்கு ஒழுங்காக மார்க்க அறிவை போதித்து வந்திருந்தால் இந்த இழிவு நம் முஸ்லிம் சகோதர/சகோதரிகளிடம் ஏற்பட்டிருக்காது. எனவே இணைவைத்து வணங்கக்கூடிய சகோதரர்கள் வழிகேட்டில் இருந்த மூதாதையர்களின் மீது கொண்டிருக்கும் அளவுக்கதிகமான பாசம் அவர்களை நரகத்தை நோக்கி நகரச் செய்கிறது. எனவே மார்க்க அறிவில் மிகவும் பின்தங்கியுள்ள, இணைவைக்கும் சகோதர / சகோதரிகளுக்கு இந்த பதிவு உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவனாக ஆரம்பம் செய்கிறேன்! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
அல்லாஹ் இணைவைப்பாளர்களுக்கு கூறும் அறிவுரை:
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (அல்குர்ஆன் 7:194)
இந்த வசனத்தில் அல்லாஹ்வையன்றி என்று கூறப்பட்டுள்ளது எனவே ஆற்றல்கள் அனைத்திற்கும் உரிமையாளன் அல்லாஹ்தான் என்று உணர வேண்டும. அடுத்து எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ என்று கூறுவதன் மூலம் அல்லாஹ்வையன்றி எவராக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாரும் இருக்க முடியாது என்று உணர வேண்டும்.
அடுத்து அவர்களும் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் என்றால் அல்லாஹ்வைத் தவிர உள்ள மற்ற அனைத்து படைப்பினங்களும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக நபிமார்கள், அவ்லியாக்கள், நல்லடியார்கள், மனிதர்கள், ஜின்கள் என்று அல்லாஹ்வின் படைப்பினங்களை வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம் அத்தனையும் இந்த அவர்கள் என்ற அர்த்தத்தில் அடங்கிவிடுகிறது. இதன் அடிப்படையில் இணைவைக்கும் மக்கள் அவ்லியா என்று யாரை கருதுகிறார்களோ அவர்களும் இந்த அவர்கள் என்ற வட்டத்திற்குள் அடங்குகிறார்கள்.
இந்த வசனத்தின் இறுதியில் இணைவைப்பாளர்கள் அழைக்கும் அந்த அவர்களை அழைத்தால் எந்த பதிலும் கிடைக்காது என்று அல்லாஹ் கூறிவிட்டு அந்த மனிதர்களை பார்த்து சவாலும் விடுகிறான். எனவே சகோதரர்களே அல்லாஹ்வின் படைப்பினங்களை வணங்குவதாக இருந்தால் மறுமையின் கேள்விக்கணக்கு நாளில் அல்லாஹ்வின் சவாலுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்!.
அல்லாஹ்வுடைய அந்தஸ்தை எடை போடும் அவலம்!
எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே! (அல்குர்ஆன் 7:191)
அல்லாஹ்வுக்கு என்று ஒரு அந்தஸ்து உள்ளது என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். அருள்புரிவதை அல்லாஹ் தமக்கு கடமையாக்கி வைத்துள்ளான். இந்த அந்தஸ்துக்கு நிகராக யாரேனும் இருப்பார்களா? ஆனால் மக்களில் பலர் அவ்லியாக்கள் என்று கூறிக்கொண்டு அவர்கள் தங்களுக்கு உதவுவார்கள் அருள்புரிவார்கள் என்று கருதுவது நியாயமா? அவ்லியா என்று கருதும் நபர்களை ஏன் அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு உயர்த்துகிறீர்கள்? இப்படி கருதுவதால் அல்லாஹ்வின் அந்தஸ்தை எடைபோடும் குற்றத்திற்கு ஆளாகிறீர்கள்.
சிந்தித்துப் பாருங்கள்! அவ்லியாவின் ஆற்றல் கீழ்கண்ட விஷயத்தில் ஏன் வெளிப்படுவதில்லை.
- ஒரு அவ்லியா உயிருடன் இருந்து அவருக்கு நோய் வந்து அவதிப்பட்டால் என்ன செய்வார் இன்னொரு அவ்லியாவை பிரார்த்தித்து அழைப்பாரா அல்லது அல்லாஹ் என்று கண்ணீர்விட்டு அழைப்பாரா?
- சரி அந்த அவ்லியாவுக்கு நோய் குணமாக அல்லாஹ்விடம் பிரார்த்தித்து விட்டு உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகுவாரா? அல்லது தனக்கு சக்தி உள்ளது என்று கூறி தாயத்து கட்டிக்கொள்வாரா? தாயத்து கட்டுவது இஸ்லாத்தில் கூடுமா?
- ஒரு அவ்லியா இறந்துவிடுகிறார் உடனே அவருடைய ஜனாஸா தானாகவே எழுந்து நின்று தன்னைத்தானே குழிப்பாட்டிக் கொள்கிறதா? அல்லது அவருடைய ஜனாஸாவை சாதாரண மனிதன் குளிப்பாட்டுகிறானா?
- அந்த இறந்த அவ்லியாவின் மீது கபன் துணி தானாகவே போர்த்தப்படுகிறதா? மனிதன் போர்த்தி விடுகிறானா?
- அந்த இறந்த அவ்லியாவுக்கு மனிதர்கள் ஒன்று கூடி ஜனாஸா தொழுகை மேற்கொள்கிறார்களா? அல்லது அந்த அவ்லியாவின் ஜனாஸா தன்னைத்தானே ஜனாஸா தொழுகையை நிறைவேற்றிக்கொள்கிறதா?
- அந்த இறந்த அவ்லியாவின் ஜனாஸாவை மனிதர்கள் தோல் கொடுத்து கப்ருஸ்தான் எடுத்துச் சென்று அடக்கம் செய்வார்களா, அல்லது அந்த அவ்லியாவின் ஜனாஸா காற்றில் மிதந்தவாறு தன்னைத்தானே சுமந்து செல்கிறதா?
- அந்த இறந்த அவ்லியாவுக்காக மனிதன் கப்ரு தோண்டுகிறானா? அல்லது அவருடைய கப்ரு தானாக வெளிப்பட்டு அந்த ஜனாஸாவை உள்ளே இழுத்துக் கொள்கிறதா?
இதை ஏன் இணைவைக்கும் சகோதர / சகோதரிகள் சிந்திப்பதில்லை? அடிக்கடி அல்லாஹ் திருமறையில் சிந்தியுங்கள் என்று கூறுகிறானே ஒருமுறையாவது கீழ்க்கண்ட இறைவசனத்தை சிந்தித்துப்பார்த்தால் கண்டிப்பாக இந்த காரியங்களிலிருந்து விலகி இருப்பீர்கள்.
அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்; (அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள் (அல்குர்ஆன் 7:192).
இணைவைப்பாளர்களை நோக்கி அல்லாஹ் விடும் சவால்
அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்; “நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த்தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் – (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம்கொடுக்காதீர்கள்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 7:195)
அல்லாஹ்வை இணைவைத்து வணங்கும் அருமைச் சகோதர சகோதரிகளே நீங்கள் அவ்லியா என்று கூறும் நபர்கள் இறந்துவிட்டார்கள். மேலும் மண்ணோடு மண்ணாகவும் மக்கிவிட்டார்கள். எனவே அல்லாஹ் இணைவைப்பாளர்களிடம் முன்வைக்கும் இந்த சவால் நிறைந்த அருள்மறை வசனத்தை சிந்தித்துப்பாருங்கள்! அவ்லியா என்று யாரை கருதுகிறீர்களோ அவர்கள் ஒருகாலத்தில் கப்ரில் நல்லடக்கம் செய்யப் பட்டவர்கள்தானே அப்படியானால் அந்த கப்ரில் உறங்கும் அவ்லியாக்களுக்கு இப்போது நடக்கும் கால்கள் உண்டா?, இப்போது பிடிக்கும் கைகள் உண்டா?, இப்போது பார்க்கக்கூடிய கண்கள் உண்டா?, இப்போது பிரார்த்தனைகளை கேட்க காதுகள் உண்டா?.
தெய்வம் என்றால் தெய்வீகத்தன்மை கொண்டவை என்று பொருள்படுகிறது. எனவே அல்லாஹ்வைத்தவிர யாரிடமாவது நீங்கள் அருள் தேடினால் அந்த அருள் தேடப்படக்கூடிய நபருக்கு தெய்வீகத்தன்மை இருக்கிறது என்றுதானே நம்புகிறீர்கள். அப்படியானால் யாரை அவ்லியாக்கள் என்று அழைத்து கப்ருவணக்கம் புரிகிறார்களோ அவர்கள் தெய்வங்கள் என்றுதானே மறைமுகமாக பொருள்படுகிறது! அவர்களை வைத்து சூழ்ச்சி செய்து பாருங்கள் என் சவால் விடுகிறான்.
மேலும் கப்ரை வணங்கும் சிலர் அதை வலம் வருகிறார்கள். அங்குள்ள தூண்களையும் சுவர்களையும் தொட்டுத் தடவுகிறார்கள். அதன் மண்ணை எடுத்து பூசிக் கொள்கிறார்கள், ஸஜ்தா செய்கிறார்கள், பணிவுடன் நிற்கிறார்கள், தங்களது தேவைகளை நிறைவேற்றக் கோருகிறார்கள். சிலர் உடல் நலத்தையும் குழந்தைப் பேற்றையும் கோருகிறார்கள். சிலர் யா ஸய்யிதீ! தூரமான ஊரிலிருந்து உங்களை நாடி வந்துள்ளேன். என்னை நிராசையாக்கி விடாதீர்கள்! என்றெல்லாம் கூறுகிறார்கள்
இவர்களைக் கண்டித்தே அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான், “மறுமை நாள் வரையில் (அழைத்த போதிலும்) அவைகள் இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையே அவை அறியாது. (அல்குர்ஆன் 46:5)
சிலர் கப்ருகளுக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்கள். சிலர் நன்மையை நாடி கப்ருகள், தர்காக்களுக்குச் செல்கிறார்கள். அவர்களால் நன்மை தீமை அளிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள். இவர்களைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ் உமக்கு யாதொரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதனை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால், அவனுடைய அக்கருணையைத் தடை செய்ய எவராலும் முடியாது. (அல்குர்ஆன் 10:107)
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவம்
இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக) (அல்குர்ஆன் 31:13)
ஈமான் கொண்டபின் எதேனும் பெரும்பாவங்கள் நிகழ்ந்துவிட்டால் அந்தப் பாவத்தை அல்லாஹ் நாடினால் ‘தவ்பா’ (பாவமீட்சி) இல்லாமலும் மன்னித்து விடலாம். ஆனால் “இணை வைத்தல்” என்ற பாவத்தை ‘தவ்பா’ இன்றி அல்லாஹ் மன்னிப்பதேயில்லை. அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.
நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான் (அல்குர்ஆன் 4:48)
ஷிர்க்’கில் ஈடுபடுபவர் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்தே வெளியேறியவராவார். அவர் பாவ மன்னிப்பு கோராமல் இறந்துவிட்டால் என்றென்றும் நரகில் தங்கிவிடுவார்.
அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுங்கள்
இந்த இணைவைப்பின் விபரீதத்தை உணர்ந்து அல்லாஹ்விடம் மட்டும் உதவி தேடக்கூடியவர்களாக மாற வேண்டும். அல்லாஹ் நமக்கு மிக சமீபமாக இருப்பதாக கூறுகிறான். அவன் நம் கோரிக்கைகளை கேட்பவனாக, நிறைவேற்றக்கூடியவனாக இருக்கிறான்.
மேலும், (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன். அழைப்பாளனின் அழைப்பிற்கு அவன் என்னை அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன் என்று கூறினான் (அல்குர்ஆன் 2:186)
திருக்குர்ஆன் கூறும் மேற்கண்ட விஷயங்களை மனதில் ஏற்றி இனியாவது இந்த இணைவைப்பை விட்டுவிட வேண்டும். அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடும் மூமின்களாக மாறி விட வேண்டும்! எல்லா தேவைகளையும் அல்லாஹ்விடத்தில் மட்டும் கேட்பவர்களாக மாறிவிட வேண்டும். எனவே மறுமை வாழ்வை பாழ்படுத்தக்கூடிய இணைவைப்பதிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பற்றுவானாக.
வெளியீடு:-