சவுதி அரேபியா நாட்டின் 90 வது தேசிய தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக சவுதி அரேபியா நாட்டின் 90 வது தேசிய தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத் (சுமைசி) மற்றும் கிங் பஹத் மருத்துவமனைகளில் (KSMC & KFMC) 107-வது மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 105க்கும் மேற்பட்ட சகோதரர்கள் பதிவு செய்து 90 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.
எண்ணற்ற கனவுகளுடன் பொருளாதாரத்தை திரட்ட தேசம் கடந்து வந்த போதிலும், பிறரின் தேவையறிந்து தங்களின் குருதியை தானமாக வழங்குவதிலும், அதிலும் குறிப்பாக அதிக நன்மைகளை தரக்கூடிய செயலாக இந்த உயிர் காக்கும் உதவியை மக்கள் அனைவரும் சந்தோசத்துடனும், தன்னார்வத்துடனும், முக்கியமாக தமிழ் பேசும் சகோதரர்கள் மட்டுமில்லாமல், பிற மாநில மற்றும் பிற நாட்டு சகோதரர்களும் அதிக அளவில் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தது அனைவருடனான சகோதரத்துவத்தையும், அன்பையும், அமைதியும் போற்றும் விதமாகவும் அமைந்திருந்தது… அல்ஹம்துலில்லாஹ்!
இது குறித்து கிங் சவுத் (சுமைசி) மற்றும் கிங் பஹத் மருத்துவமனைகளின் (KSMC & KFMC) இரத்த வங்கிகளின் இயக்குனர்கள் பேசும் பொழுது, இந்த அசாதாரண காலச் சூழ்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு செய்யக்கூடிய இந்தப் பணி மிகவும் மகத்தானது. மருத்துவமனையில் இரத்தப் பற்றாக்குறை இருந்தாலும், ஹஜ் மற்றும் உம்ரா காலங்களாக இருந்தாலும், இன்ன பிற தேவைகளாக இருந்தாலும் கோரிக்கை வைத்தவுடன் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் எதிர்நோக்காமல் உடனடியாக அதற்கு ஒரு முகாமை ஏற்படுத்திக் கொடுத்து சரி செய்ய வழி செய்கிறார்கள். இவர்களுக்காகவும், கொடையாளிகளுக்காகவும், தன்னலமில்லாது பிறர் நலம் பேணும் இந்த ஆகச் சிறந்த பணி மென்மேலும் சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்தார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல இரத்ததான ஒருங்கிணைப்பாளர் சகோ. அஹமது முக்தார் அவர்கள் கூறும் பொழுது, இந்த இரத்ததான முகாம்கள் நடத்துவதின் நோக்கத்தை சொல்வதென்றால், “இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுதல்” என்ற உயரிய நோக்கத்தை தவிர வேறெதுவுமில்லை. இன்னும் முத்தாய்ப்பாக சொல்வதென்றால்…
“யார் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ, அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” – அல்குர்ஆன் 5:32
என்ற அல்குர்ஆன் வசனத்தை நடமுறைப்படுத்தி, அதன் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் மனிதத்தை நேசிக்கக் கூடியவர்கள், பிறர் நலம் பேணக் கூடியவர்கள் என்று உலகத்திற்கு பறை சாற்றவும், ஏக இறைவனிடத்தில் மட்டுமே இதற்குரிய நற்கூலியை பெறுபவர்களாகவும், இந்த மகத்தான பணிகளை செய்து வருவதாகக் கூறினார்.
மேலும் தெரிவிக்கையில், எங்களது அமைப்பின் மூலம் கடந்த 14 வருடங்களில் இதுவரை 106 முகாம்கள் ரியாத்தில் மட்டும் நடத்தப்பட்டுள்ளது, வருடம் தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் இரத்தம் தேவையுடையோருக்கு தானமாக வழங்கப்பட்டு கொண்டுள்ளது. இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற முகாமில் 106 நபர்கள் இரத்ததானம் செய்திருந்தனர், மேலும் நிகழ்கால கொரோனா பேரிடர் காலத்தில் நோயாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு அவசர தேவைக்காக இதுவரை 400 யூனிட்கள் வரை இரத்தம் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் செய்கின்ற சமூக மற்றும் மனிதநேயப் பணிகளைப் பாராட்டி, அதற்குரிய அங்கீகாரமாக சவுதி அரசாங்கத்தின் சுகாதாரத்துறை சார்பாகவும், மருத்துவமனை சார்பாகவும் விருதுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்த முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல, கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். சிறப்பாக நடைபெற்ற முகாமிற்கும், ஏற்பாடுகளை சிறப்பாக செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மருத்துவமனைகளின் இயக்குனர்கள் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
…எல்லா புகழும் இறைவனுக்கே….
என்றும் மனிதநேயப் பணியில்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
ரியாத் மண்டலம்.
RIYADH | TNTJ | BLOOD | CAMPAIGN | KFMC | KSMC | EMERGENCY | HUMANITIES | SAVE THREE LIVES